-
பங்குடையான் சீரணங்கைப் பார்வதியை நால்வாயொப்
பங்குடையான் தந்தையிப் பொய்மனப் - பங்குடையா
னல்கிய யாவும் அளித்தான்பூ உய்யவன்
நல்கிய வேதமவை நான்கு (31)சொற்பிரித்து:-
பங்கு உடையான் சீரணங்கைப் பார்வதியை; நால்வாய் ஒப்ப
அங்கு உடையான் தந்தை இப்பொய்மனப் - பங்குடையான்
அல்கிய யாவும் அளித்தான் பூ உய்ய அவன்
நல்கிய வேதம் அவை நான்குஅருஞ்சொற்பொருள்:-
பங்கு - பாகம் / முடம்
நால்வாய் - யானை
அங்குடையான் - அங்குசம் உடையான் (விநாயகன்)
அல்கிய - குறைபட்ட/குறைந்த -
நால்வர்க்கு வேதங்கள் நல்கி வினையூசல்
நால்வர்க்கு நாடருள்வான் நாவூற நால்வர்க்குச்
செந்தமி ழாம்மிப்பூ தாமுற்ற இன்னலறச்
செந்தமித் தாளே தகும் (32)சொற்பிரித்து:-
நால்வர்க்கு வேதங்கள் நல்கி, வினை ஊசல்
நால்வர்க்கு நாட அருள்வான்; நாவூற நால்வர்க்குச்
செந்தமிழாம்; இப்பூ(மி) தாம் உற்ற இன்னல் அறச்
செந்தமித் தாளே தகும்அருஞ்சொற்பொருள்:-
நாலுதல் - தொங்குதல்
செம்மை - செழுமை / சிவப்பு
தமி - ஒப்பில்லாமல்பாடற்குறிப்பு:-
தட்சிணாமூர்த்தி வடிவில் இறைவன், சனகாதியர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதங்களை உபதேசித்தான். -
தக்கிணங்கன் சுந்தரனை தாளடியில் ஆட்கொண்டு
தக்கிணர்கை யேந்தியுத் தந்தம்வாழ் தக்கிணனே
பொய்யனென் போகப் பசியறுத்த ருள்கநீ
பொய்யெனப் போகப் பொரு (33)சொற்பிரித்து:-
தக்கு இணங்கன் சுந்தரனை தாளடியில் ஆட்கொண்டு,
உதக்கு, இணர் கையேந்தி உத் தந்தம் வாழ் தக்கிணனே,
பொய்யன் என் போகப் பசி அறுத்து அருள்க நீ
பொய் எனப் போகப் பொருஅருஞ்சொற்பொருள்:-
தக்கு - நிலையான
இணங்கன் - நண்பன்
உதக்கு - வடக்கு
இணர் - சுவாலை
தந்தம் - மலை முகடு
தக்கிணன் - தட்சிணாமூர்த்தி
போகம் - செல்வம்
பொரு - எதிர்த் தடை -
பொருது நிமலையோர் பங்கென்றான் காமன்
பொருது வரஅழித்தான் பெய்யப் - பொருதுமி
மண்கொண்டாங் கைந்நீர் மறையேத்தும் வான்மியூர்
மண்கொண்டான் தாளொன்றே மெய் (34)சொற்பிரித்து:-
பொருது நிமலை ஓர் பங்கு என்றான் காமன்
பொருதுவர அழித்தான்; பெய் அப்பு ஒரு துமி
மண் கொண்டு ஆங்கு ஐந்நீர்; மறை ஏத்தும் வான்மியூர்
மண் கொண்டான் தாள் ஒன்றே மெய்அருஞ்சொற்பொருள்:-
பொருதுதல் - ஒன்றுதல் / போரிடல்
நிமலை - பார்வதி
அப்பு - நீர் / கங்கை
துமி - துளி
மண் - நிலம் / திருநீறு
(திரு)மண்கொண்டான் - சிவன்பாடற்குறிப்பு:-
வான்மீகி கேட்ட வரத்துக்கு இணங்க, சிவபெருமானின் சடைவாழ் கங்கையிலிருந்து சிந்திய நீர்த்துளிகள், ஜென்ம நாசனி, காம நாசனி, பாப நாசனி, ஞானதாயினி மற்றும் மோட்சதாயினி எனும் ஐந்து தீர்த்தங்களாக திருவான்மியூர் திருத்தலத்தில் அமைந்துள்ளன. -
மெய்தவ நீறுடையான் மேனியெங்கும் பூம்பாண
மெய்தவனை நீறா யெரித்தவனா - மெய்தவம்
வீட்டு மமுதேசன் மேவுஞ்சீர் வான்மியூர்
வீட்டு வழிகாண் விரை (35)சொற்பிரித்து:-
மெய் தவநீறு உடையான் மேனி எங்கும் பூம்பாணம்
எய்தவனை நீறாய் எரித்தவனாம் - எய்த அவம்
வீட்டும் அமுதேசன் மேவும் சீர் வான்மியூர்
வீட்டு வழி காண், விரைஅருஞ்சொற்பொருள்:-
நீறு - திருநீறு / சாம்பல்
கணம் - கணை
எய்தல் - பணிதல்
அவம் - கேடு
வீட்டுதல் - அழித்தல் -
விரையார் மலரினான் வான்மியூ ரானவ்
விரையார் அரவணிந்தான் மன்றம் விரையார்
விடையால் விழுவர் விரைந்தோ ரெவர்க்கும்
விடையா னருள்செய்கு வான் (36)சொற்பிரித்து:-
விரை ஆர் மலரினான் வான்மியூரான் அவ்
இரை ஆர் அரவு அணிந்தான் மன்றம் விரையார்
விடையால் விழுவர்; விரைந்தோர் எவர்க்கும்
விடையான் அருள் செய்குவான்அருஞ்சொற்பொருள்:-
விரை - நறுமணம்
இரை - ஓசை
அரவம் - பாம்பு
விடை - வருத்தம் / எருது -
வான்மதி யோடரவம் மான்மழு தேநதிக்கொள்
வான்மதிக் கண்ணியான் மேவுஞ்செவ் - வான்மதி
மால்கதி ரோன்கோன் மறைவணங்கும்; ஏத்தொழிய
மால்கதி யாய்செய் முறை (37)சொற்பிரித்து:-
வான்மதியோடு அரவம் மான் மழு தே(ன்)நதிக் கொள்வான்
மதிக்கண்ணியான் மேவும் செவ்வு ஆன், மதி,
மால், கதிரோன், கோன், மறை வணங்கும்; ஏத்து, ஒழிய
மால் கதியாய் செய் முறைஅருஞ்சொற்பொருள்:-
மதிக்கண்ணியான் - சிவன் ஆன்
செவ்வு - திசை
ஆன் - அவ்விடம்
மால் - திருமால்/மயக்கம்
கதி - வழி
முறை - முறையீடு -
முறையுமையாள் தம்வலஞ்சேர் வான்மி நகர
முறையுமையா காகா வெனப்பன் - முறையுமையா
மேத்தியக்கம் பல்கேட்ட ருள்வாயே நின்பாத
மேத்தியக்கம் தீர்க்கும் விடை (38)சொற்பிரித்து:-
முறை உமையாள் தம்வலஞ்சேர் வான்மி(யூர்) நகரம்
உறையும் ஐயா, கா கா என பன்முறை உமை யாம்
ஏத்தியக் கம்பல் கேட்டு அருள்வாயே நின் பாதமே
இத் தியக்கம் தீர்க்கும் விடைஅருஞ்சொற்பொருள்:-
முறை - ஒழுக்கம்/மேன்மை
கம்பல் - ஆரவாரம்
தியக்கம் - மயக்கம் -
விடையேறு வேதியன் வான்மியூர் மேவும்
விடையேறுங் கோஅல் பகலிவ் - விடையேறு
காணாத வன்வணங்கும் கோலவெழிற் கூத்தனைக்
காணாத கண்ணன்று கண் (39)சொற்பிரித்து:-
விடை ஏறு வேதியன்; வான்மியூர் மேவும்
விடை ஏறும் கோ; அல்பகல் இவ் இடை ஏறு
காண் ஆதவன் வணங்கும் கோல எழில் கூத்தனைக்
காணாத கண் அன்று கண்அருஞ்சொற்பொருள்:-
விடை - எருது / பாம்பு
கோ - சிவன் -
கண்ணாரும் சீர்நுதலாய் கர்வத் துமையெதிர்த்தக்
கண்ணாரும் தீயறிவர் கீழ்க்கரைக் - கண்ணாரும்
நம்பிநும் செங்கண்ணும் நல்குமருள் என்றென்றும்
நம்பிநும் நீறணியும் நான் (40)சொற்பிரித்து:-
கண் ஆரும் சீர் நுதலாய், கர்வத்து உமை எதிர்த்தக்
கண்ணார் உம் தீ அறிவர்; கீழ்க்கரைக்கண் ஆரும்
நம்பி, நும் செங்கண்ணும் நல்கும் அருள் என்று, என்றும்
நம்பி நும் நீறணியும் நான்அருஞ்சொற்பொருள்:-
ஆரும் - விளங்கும் / தங்கும்
நுதல் - நெற்றி
கண்ணார் - பகைவர்
நம்பி - இறைவன்
| 01-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 |
