skip to content

மருந்தீச்வரன் அந்தாதி (61 - 70)

மருந்தீச்வரன் அந்தாதி (61-70)

  1. தருவார் தலம்பெருந் திங்களன்றோர் நாள்வந்
    தருவார் வடிவிலங்கு றைவார் - தருவார்
    தவறா தருளுமக்கு தந்தும் மறத்தல்
    தவறா முணர்வே திரு (61)

    சொற்பிரித்து:-
    (கொன்றை) தரு ஆர் தலம் பெருந்திங்களன்று ஓர்நாள் வந்து
    அரு ஆர் வடிவில் அங்கு உறைவார் - தருவார்
    தவறாது அருள் உமக்கு; தந்தும் மறத்தல்
    தவறாம்; (அவர்) உணர்வே திரு

    அருஞ்சொற்பொருள்:-
    திரு - நல்வினை

  2. திருவருள் தந்திடும் சோதியான் உள்ளத்
    திருவருள் ளாரவன் தாளேத் - திருவருள்
    மண்ணோடி செவ்வடிகாண் மாதவன் வந்தேத்தும்
    மண்ணோடி மன்றாடி முற்று (62)

    சொற்பிரித்து:-
    திருவருள் தந்திடும் சோதியான், உள்ளத்து
    இருவர் உள்ளார் அவன் தாளேத்து - இருவருள்
    மண்ணோடி செவ்வடிகாண் மாதவன் வந்து ஏத்தும்
    மண்ணோடி மன்றாடி முற்று

    அருஞ்சொற்பொருள்:-
    முற்று - முற்றுகையிடு

  3. முற்றும் வினையெலாம் வான்மியூர் வந்தேத்த
    முற்றும் விழைவோர் மனவிரும்பு - முற்றும்
    தருவான் மருந்தீசன் தீதறுக்க பெற்றான்
    தருவான் முனிமந் திரம் (63)

    சொற்பிரித்து:-
    முற்றும் வினையெலாம் வான்மியூர் வந்தேத்த
    முற்றும்; விழைவோர் மனவிரும்பும் முற்றும்
    தருவான் மருந்தீசன்; தீதறுக்க பெற்றான்
    தரு ஆன் (குறு)முனி மந்திரம்

    அருஞ்சொற்பொருள்:-
    முற்றும் - முதிரும் / முடியும் / முழுதும்
    ஆன் - அவ்விடம்
    முனி - குறுமுனி அகத்தியன்

  4. திரங்க மடைநெஞ்சே தீக்கணன் இல்சேர்ந்
    திரங்க வனேஉன் நிலைபார்த் - திரங்கப்
    பணிந்தவன் தாளேத்து பால்வண்ணன் பாதம்
    பணிந்தவன் பாலருட்பெ ருக்கு (64)

    சொற்பிரித்து:-
    திரங்கம் அடை நெஞ்சே, தீக்கணன் இல் சேர்ந்து
    இரங்கு; அவனே உன் நிலை பார்த்து - இரங்கப்
    பணிந்து அவன் தாளேத்து; பால்வண்ணன் பாதம்
    பணிந்தவன் பால் அருட் பெருக்கு

    அருஞ்சொற்பொருள்:-
    திரங்கம் - நகரம்
    இரங்கு - அழு
    இரங்கு - கருணைசெய்

  5. பெருகுபுன லார்கடலூர்ப் பெம்மான் முடிகண்
    பெருகுபுன லார்கங்கைப் பூந்தூள் - பெருகுபுனல்
    பூங்கொன்றைந் தாகப் புரிந்தாரப் பாலவனைப்
    பூங்கொன்றைக் கொண்டுப் புனை (65)

    சொற்பிரித்து:-
    பெருகுபுனல் ஆர் கடல் ஊர்ப் பெம்மான், "முடிகண்
    பெருகுபுனலார்", கங்கைப் பூந்தூள் பெருகுபுனல்
    பூங்கு ஒன்று ஐந்தாகப் புரிந்தார் அப் பாலவனைப்
    பூங்கொன்றைக் கொண்டுப் புனை

    அருஞ்சொற்பொருள்:-
    பெருகு - கடல் நீரேற்றம் / வெள்ளம் / அதிகரித்தல்
    பூங்குதல் - பொங்குதல்

    பாடற்குறிப்பு:-
    பெருமானின் தலைவாழ் கங்கையின் துளி திருவான்மியூர் தலத்தில் விழுந்து அதுவே ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

  6. புனைவார் சடைமேல் பிறையொடுபூங் கொன்றை
    புனைவார் பெருமான் புகழைப் - புனைவார்
    கவியாய்ப் புலவரன்றிக் கோன்புகழ் கூறாக்
    கவியாய்ப் பயனெதற் கோ (66)

    சொற்பிரித்து:-
    புனை வார் சடைமேல் பிறையொடு பூங்கொன்றை
    புனைவார் பெருமான் புகழைப் - புனைவார்
    கவியாய்ப் புலவர்; அன்றிக் கோன் புகழ் கூறாக்
    கவி ஆய்ப் பயன் எதற்கோ?

    அருஞ்சொற்பொருள்:-
    புனை - நீர்
    வார் - ஒழுகுதல்
    புனைவார் - அணிதல் / எழுதுதல்

  7. கோலத்தாய் பாகத்தாய் கையமொலி சேர்நகர்தங்
    கோலத்தாய் சேயுமைதி யாகேசன் - கோலத்தாய்
    பத்தனேத் தும்பரமாய் யாதுமாய் நின்றஅரூ
    பத்தனே என்னுள் பயில் (67)

    சொற்பிரித்து:-
    கோலத்தாய் பாகத்தாய்; கையம் ஒலி சேர் நகர் தங்கு
    ஓலத்தாய்; சேய் உமை தியாகேசன் - கோலத்தாய்;
    பத்தன் ஏத்தும் பரமாய் யாதுமாய் நின்ற
    அரூபத்தனே என்னுள் பயில்

    அருஞ்சொற்பொருள்:-
    கோலத்தாய் - அழகு பொருந்திய தாய் (பார்வதி)
    கையம் - கடல்
    ஓலம் - பாம்பு
    அரூபத்தன் - அருவமாய் அமைந்த சிவன்
    பயில் - தங்கு

  8. பயில்வானை நின்றடைத்தோன் பேரதின்பம் ஈங்கண்
    பயில்வானை இத்தலத்தார்ப் பாடிப் - பயில்வானை
    அத்தனை ஏத்த அமுதபுரி வந்துள்ளார்
    அத்தனை இன்பம் அடை (68)

    சொற்பிரித்து:-
    பயில், வானை நின்றடைத்தோன் பேர், அது இன்பம்; ஈங்கண்
    பயில்வானை, இத்தலத்து ஆர்ப்பு ஆடிப் - பயில்வானை,
    அத்தனை ஏத்த, அமுதபுரி வந்து, உள் ஆர்
    அத்தனை இன்பம் அடை

    அருஞ்சொற்பொருள்:-
    பயில் - சொல்
    பயில்வானை - தங்குதல் / பழகுதல்
    ஆர்ப்பு - மகிழ்ந்து
    உள் - மனம்
    ஆர் - அமைந்த

  9. அடைவானை ஆழ்மண்ணை அங்கோடிங் கென்றே
    அடைவானை ஏத்தமு தூரை - அடைவானை
    மெய்சேர்த் தணைவானை மன்னாற வெண்ணீற்றை
    மெய்சேர்த் துநீயும் முனை (69)

    சொற்பிரித்து:-
    அடை வானை, ஆழ் மண்ணை, அங்கோடு இங்கு என்றே
    அடைவானை ஏத்த அமுதூரை - அடைவானை
    மெய் சேர்த்து அணைவான் ஐ; மன் ஆற, வெண்ணீற்றை
    மெய் சேர்த்து நீயும் முனை

  10. முனைநின்றாய் மூவருள் வான்மியூர் மேவு
    முனைநின்றாய்ந் தேன்கவியால் ஒவ்வா - முனைநின்றாய்
    நீயென்கு றைகண்டாய் என்னிடத்தே நாவேறி
    நீயென்கு றையறுக்க வா (70)

    சொற்பிரித்து:-
    மு(ன்)னை நின்றாய் மூவருள், வான்மியூர் மேவும்
    உ(ன்)னை நின்று ஆய்ந்தேன் கவியால்; ஒவ்வா - முனைநின்றாய்
    நீ; என்(ன) குறை கண்டாய் என்னிடத்தே? நா ஏறி
    நீ என் குறை அறுக்க வா

    அருஞ்சொற்பொருள்:-
    ஒவ்வாது - இசையாது
    முனை - கோபித்து

01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.