தீவுக்கோர் தீர்வு...
வண்டுகளொன் றாய்ச்சேர்ந்து வாதம் செய்யும்
.. வழக்கில்லா வழக்கிதுவே வாயால் நாளும்
கொண்டுவரும் மலர்சொரிந்த குழம்புத் தேனைக்
.. கொள்வதாலே மதுக்கூடு தனதாய்ப் போமோ?
செண்டுகளோ பனிநீரைத் தினமும் மாற்றித்
.. தெளிதேனாய் அளித்திடினும் சூதால் தோற்கும்;
அண்டைநில ஈழமண்ணை வேராய்க் கொண்டோர்,
.. அளித்ததெது அடைந்ததெதென் றகிலம் சொல்லும். (1)
கவ்வவரும் கீரியெதிர் பாம்பை இட்டு
.. களத்திடையே போர்மூட்டிப் பொருளைச் சேர்ப்பான்;
அவ்விதமாய் இம்மண்ணில் நடந்த தாலே
.. ஆளுக்கொரு திசைசென்றார் அன்பர் பாரில்,
செவ்வியதாய் தாய்நாட்டில் வாழ்வைக் காணாச்
.. செத்தொழிந்த சந்ததிகள் இரண்டா? மூன்றா?;
எவ்வூரும் எமதென்னும் சங்கப் பாட்டின்
.. எழுபொருளும் ஈதாமோ? இதயம் சோரும். (2)
கிட்டியமண் துளியெனினும் பாறை ஓரம்
.. கிளர்ந்தெழும்பும் சிறுவிதையின் வேகம் காண்க;
முட்டியது பின்னோர்நாள் வேரை நீட்டி
.. முளைமறுத்தப் பாறைதனை பிளக்கும் மெல்ல;
வெட்டியதோ இலைகிளைதான்; விளைந்த மண்ணுள்
.. வேரென்றும் விழித்திருக்கும் விடியல் தேடி;
கட்டியதாய் அவர்நினைக்கும் கோட்டை எல்லாம்
.. கனவாகும், காலஅலை கவிழ்த்துத் தள்ளும் (3)
இத்தனைநாள் போராடிப் பார்த்து வீணாய்
.. இழந்தவைதான் ஏராளம்; இன்னும் ஏனோ?
சத்தியத்தின் வழிசெல்லும் பாதை தன்னில்
.. சத்தியமாய் வெற்றியுண்டு; சற்றே முன்னர்
இத்தரையின் சுதந்திரத்தை வாங்கித் தந்த
.. இணையில்லாப் புதுசக்தி அதுவே அன்றோ?
கத்தியிலா இரத்தமிலாக் கரமே என்றும்
.. காட்டிடுமே வெற்றிபெறும் காட்சி தன்னை. (4)
இன்னுமொரு வாய்ப்பதனை அளித்துப் பார்ப்போம்,
.. இயல்பான அரசியலால் இயலும் காண்க;
வன்மையினை எதிர்த்துத்தன் வாழ்வை ஈந்தோர்
.. வருங்காலம் கண்டிருப்பார் கனவில் அன்றே,
இன்பமதின் இயல்பென்றும் மழையை ஒக்கும்,
.. இடிகண்டோம், இனிதொடரும் இன்பத் தூறல்;
முன்னுற்ற துன்பமில்லா முடிவ தொன்றை,
.. முடிவில்லான் எவர்க்குமாக முடித்து வைப்பான் (5)
வேர்தந்த விளைவாக விளைச்சல் உண்டு,
.. வீரத்தின் விளைவாக வெற்றி உண்டு,
தேர்வுண்டு, விளைவாகத் தேர்ச்சி உண்டு
.. தேவையதன் விளைவாகத் தேடல் உண்டு,
நீர்தந்த விளைவாக நிலமும் உண்டு,
.. நிலஞ்சார்ந்த பெருங்குடிக்கு நிஜமாய் ஓர்நாள்
தீர்வுண்டு, விளைவாகத் தீவில் மீண்டும்
.. செழிப்பான வாழ்க்கையது திரும்ப உண்டே. (6)
தமிழ்க்கலை இலக்கியப்பேரவை 25/07/10 அன்று நடத்திய 'தீர்வு தேடும் தீவு' எனும் கவியரங்கத்துக்காகப் படைக்கப்பட்டது.
