ஒரு வெளிச்சத்தின் விடியல்!
வரும் பகலுக்கு
கட்டியங்கூறும் விதமாய்
வெடிச்சத்தங்கள்!
மண்ணில் இருந்தால்
கதிரவன் வருகிறானா
என அறியமுடியாத காரணத்தால்
வானேறிப் பறந்து
அவனை வெகு தூரத்தில்
பார்த்த இன்பத்தில்
பூவாய்த் தெளித்துப் பூரிக்கும் ஏவுகணை!
இருட்டைக் கிழித்துச் சென்ற
ஏவுகணையின் ஏற்றத்தில்
செருக்கேறும்
ஆயிரம் வாலாவின்
அட்டகாசச் சிரிப்பு!
இருளே! உன்னை என் புகையால்
மூடி, இல்லாதபடி செய்கிறேன் பார்
என்னும் விதமாய் புகையைக் கக்கித்
தோற்றத்தை மறைக்க முயலும்
பாம்பு மாத்திரைகள்!
தூங்கிக் கிடக்கும் இருளின் முதுகைத்
தீயால் உரசி ஒளிப்பொறிகளை
வாரியிறைக்கும் கம்பி மத்தாப்புகள்!
தானே சூரியன் என்றெண்ணி
தரையில் சுழன்று
வெளிச்சத்தின் வீரியத்தைக் காட்டி
இருளை விரட்ட எத்தனிக்கும்
சங்குச் சக்கரங்கள்!
சோம்பேறி இருளை
அடித்துக் கிளப்ப
தீச்சுடரைத் திரட்டித் தேய்க்கும்
சாட்டைகள்!
ஒளியின் ஒவ்வொரு வண்ணத்தையும்
தம் குட்டித்தீக் கொழுந்துகளால்
கொலுவைக்கும் மத்தாப்புகள்!
அத்தனை தீக்குழந்தைகளும்
இருளெரிக்க
ஏன் இவ்வளவு
ஆர்ப்பரிக்கின்றன?
ஓ! வெளிச்சப் புடவையை
விளாசியபடி
விடியல் தாய், வீதி நுழைந்து விட்டாள் -
கைகளில் கதிரவன் என்னும்
சோற்றுக்கிண்ணம் ஏந்தியபடி!
